Monday, September 27, 2010

ஏன் ஏன் சிறுமி கதையைப் பற்றி....


            சமீபத்தில்  மதுரையில் புத்தகத் திருவிழா. சிறுவர் புத்தகங்கள் விற்பனை செய்யும் "துலிகா" புத்தக நிலையத்தில் குழந்தைகளுக்கான விதவிதமான, வண்ணமயமான புத்தகங்கள், ஆசை ஆசையாய் வாங்கத் தூண்டியது. அதில் ஒரு புத்தகம் "ஏன் - ஏன் சிறுமி". மெகசாசே விருது பெற்ற, மலைவாழ் மக்களுக்கென தன வாழ்வையே ஒப்புவித்த வங்காள எழுத்தாளர், செயல்பாட்டாளர், மகாஸ்வேதா தேவி அவர்களின் ஆங்கில புத்தகமான "ஒய்-ஒய் கேர்ள்" புத்தகத்தின் தமிழாக்கம். தமிழில்  அம்பை அவர்கள் மொழியாக்கம் செய்துள்ளார். இபுத்தகத்தின் ஓவியங்கள் கண்ணியிகா கிணி என்பவரால் மிக அழகாக வரையப்பட்டுள்ளது. புத்தகத்தின் வடிவமும், படங்களும், அதிலும் அந்தச் சிருமியின் அகண்ட, பெரிய கண்கள்.... அப்பப்பா என்ன அழகு. அதற்காகவே அந்த புத்தகத்தினை வாங்கினேன்.
          கதையின் கரு ஆதிவாசிகளின் வாழ்வை, தேவைகளை, குழந்தைகளின் உலகினை புரிய வைத்துள்ள அற்புதமான படைப்பு. சமூக செயல்பாட்டாளர்களுக்கு போராட்டத்தின் முதல் யுக்தியே எழுத்து என்பதை கற்பிக்கின்றது. இக்கதையில் வரும் மொயினா என்னும் ஆதிவாசி சிறுமி எதையும் கேள்வி கேட்கிறாள். குழந்தை பருவத்தின் - சிறார் பருவத்தின் சிறப்பே துணிவும், தேடலும் தானே. மொயினா தாயை, தபால்காரரை, ஆசிரியரை, பண்ணையாரை எல்லோரையும், எல்லாவற்றையும், கேள்வி கேட்கிறாள்.
         அவளுக்கு பயமில்லை.... எதைக்குறித்தும், பாம்பினைத் துரத்துகிறாள், அதனைப் பிடித்து கறி சமைக்கச் சொல்கிறாள், ஆடுகளை மேய்க்கிறாள்..... அதற்காக  ஆண்டானிடம் அடிமையாகவில்லை.  பள்ளியின் நேரத்தை மாற்றச் சொல்கிறாள்.... உடன் பிறந்தோருக்கு கல்வியின் அவசியத்தை எடுத்துக் கூறுகிறாள். அவள் விரும்பும் இடத்தில தங்குவதற்கு தயாராய் உள்ளாள். இதில் தடை வரும் பொது "ஏன்" என்று கேள்வி கேட்கிறாள்.
        கதையின் ஆழம் என்னை சற்று யோசிக்க வைத்தது. குழந்தைகள் கேள்வி கேட்கும்போது சில நிமிடம் நம்மைத் திகைக்க வைத்துவிடுகிறார்கள். பல சமயம் வெட்கப்பட வைக்கிறார்கள். சமீபத்தில் குடும்பத்துடன் மைசூருக்கு சென்று கொண்டிருந்தபோது, என் சகோதரியின் மூன்று வயது மகன் தன்னை கண்டித்த, கையோங்கிய அம்மாவிடம் 'ஏனம்மா என்னை அடிச்ச?' என்று முகத்கி இழுத்து வைத்து மழலையோடு கேட்ட நிமிடம் சட்டென்று மனதை அழுத்திவிட்டது. எத்தனை குழந்தைகள் ஏன் அடிக்கப்படுகிறோம் என்று கேள்வி கேட்கிறார்கள் - உரக்க. எத்தனை கேள்விகள் உள்ளுக்குள்ளயே உறங்கிக் கொண்டிருக்கிறதோ - குழந்தைகளிடமும், பெண்களிடமும், ஒடுக்கப்பட்டோரிடமும். 
     
      கேள்விகள் எத்தனை விதம், ஆனால் நாம் கேட்டிருகிறோமா? ஏன் கேட்பதில்லை?
 கேட்டிருகிறோமா - என்றாவது கேள்விகள்? ஆம், நானும் சிறுமியாய் இருந்தபோது கேட்டிருக்கக் கூடும். ஆனால் அது பல நேரங்களில் மொயினாவைப் போல் நேருக்கு நேர், பட்டென்று, முகத்திற்கு நேராய் அன்று... எனக்குள்ளாய் என்னைப் போல் மௌனமாய். ஒருவேளை கேடிருந்தால் இன்னும் ஒரு பழம் அதிகமாய் கிடைத்திருக்கலாம். எனக்கு பிடித்த வெளிர் நீல உடை உடுதியிருக்கலாம், சுற்றுலா சென்றிருக்கலாம், ரிக்சாகாரனின் அசிங்கம், பேருந்தில் உரசும் ஆணின் அருவெறுப்பு, பக்கத்து, எதிர்த்த வீட்டு முதியோரின் வழிசல்கள், இன்னும் பல இன்னல்கள் இவற்றைத் தவிர்த்திருக்கலாம். இது என் அனுபவம் மட்டும்தானா அல்லது என்னைப் போன்ற என் கூட்டுச் சிறுமிகளுக்கும் தானா? எனக்குத் தெரிந்து என் தோழியர் பலரும் அப்படிதான் இருந்தனர்... இன்றும் அப்படிதான் இருக்கின்றனர் ...
       மொழி கற்பித்தலை எளிதாய் ஆக்கிய நண்பர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தபோது ஒரு மொழியினை எ-ஏ வரிசை கேள்விகளுக்குட்படுதினால் சுலபமாய் கற்றுக் கொண்டுவிடலாம் என்ற அறிவு கிடைத்தது. பின் ஏன் நாம் நம்மை கேள்வி கேட்க அனுமதிப்பதில்லை. ஒரு வேளை என் சந்தேகங்களை வீட்டிலும், பள்ளியிலும், பணியிலும், கேட்டிருந்தால் தெளிவு பெற்று இருக்கலாமா? அல்லது குறைந்த பட்சம் துணிவாவது பெற்றிருக்கலாமோ என்று தோன்றியது.
       யார் கேள்வி கேட்கிறார்கள்? அறியாமையில் இருப்பவர்கள். யார் அறியாமையில் இருப்பவர்கள்? குழந்தைகள், மைய நீரோட்ட வாழ்வினை கைகொள்ளாதோர், கிராமத்தில் உள்ளோர், பொருளாதாரத்திலும், சமூகத்திலும் ஒடுக்கப்பட்டோர், சமூக ஊனமுற்றோர் ஆகியோர் துணிவாய் கேள்வி கேட்கிறார்கள். ஆனால் அறிவிலும், பள்ளிப் படிப்பிலும், உடையிலும், உச்சாணியில் இருக்கிறோம் என்றும், அறிவை பெற்றுள்ளோம் என்றும், கல்வியைப் பெற்றுள்ளோம் என்றும், கற்பிக்கும் திறன் உள்ளது என பள்ளி, கல்லூரி நடத்துகிறவர்களும் கேள்வி கேட்பதுமில்லை, கேட்க அனுமதிப்பதுமில்லை.
        எல்லா கேள்விகளும் ஒரே மாதிரியானதுமில்லை... எல்லா பதில்களும் ஒரே மாதிரியாக இருக்கப் போவதுமில்லை. நாம் கேள்வியினால் ஆளுமை மாற்றத்தையும், சமூக மாற்றத்தையும் கொண்டு வரலாம். கேள்விகள் விடியலுக்கு, பகுத்தறிவிற்கு, புதுமைக்கு, நம்மை இட்டுச் செல்லும் என்பதில் ஐயமில்லை. ஒரு முறை கேட்க ஆரம்பித்தால் வாயும், சிந்தையும், சும்மா இராது... பதில்களோடு கேள்விகளையும் கேட்டுக் கொண்டே இருக்கும்.